சென்னை: இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. தற்போது வளிமண்டலத்தில் சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வரும் 3-ம் தேதி, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனீ, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மழையால், வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.