சென்னை: தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசுகையில், ”அ.தி.மு.க., ஆட்சியில், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தற்போது, நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜா. கண்ணப்பன் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் தினமும் 23 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் 34 லட்சமாக உயர்ந்துள்ளது. கூடுதலாக 11 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். கறவை மாடு உற்பத்திக்கு 6 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் கோடி கடன் வழங்க உள்ளோம். சங்கம் தொடங்கினால் 1 லட்சம் மற்றும் கறவை மாடுகளை வாங்க கடன் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே 1 லிட்டர் பாலின் விலை தமிழகத்தில் மிகக் குறைவாக ரூ. 40. மற்ற மாநிலங்களில் 1 லிட்டர் ரூ. 54 மற்றும் தனிப்பட்ட முறையில் ரூ. 56 வரை விற்கப்படுகிறது. பால் கூட்டுறவு சங்கம் மூலம் அதிகளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 54 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.