சென்னை: இது தொடர்பாக தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- அக்டோபர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை மிகுந்த கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 384 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் பணியைத் தொடர உள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அக்டோபர் 18 முதல் தங்கள் பணியைத் தொடர உள்ளனர். கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட தீ விபத்துகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சென்னையில் மட்டும் 24 இடங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். அக்டோபர் 18 முதல் அக்டோபர் 22 வரை அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

தீபாவளியன்று, சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் பெறப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் 9,207 கடைகளுக்கு ஆட்சேபனையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், சென்னையில் 1,088 கடைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழ்நாடு முழுவதும் 770 கடைகளுக்கும், சென்னையில் 89 கடைகளுக்கும் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.