சென்னை: தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது, தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகளை மேம்படுத்துதல், பாலங்கள் அமைத்தல், வேகக் கட்டுப்பாடுகளை நீக்குதல், வளைவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை-ரேணிகுண்டா, அரக்கோணம்-ஜோலார்பேட்டை, சென்னை-கூடூர் ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை – விழுப்புரம் – திருச்சி வழித்தடத்தில் தற்போது மணிக்கு 80 முதல் 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வளைவுகள் அதிகம் உள்ளதாலும், பழைய பாலங்கள் மேம்படுத்தப்படாததாலும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் வளைவுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளைவுகளை அகற்றுதல், பழைய பாலங்களை மேம்படுத்துதல், பழைய ரயில் பாதைகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் மார்க்கத்தில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், திருச்சி – விழுப்புரம் மார்க்கத்தில் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 – 100 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. எனவே, இந்த பாதையில் தேவையற்ற வளைவுகளை அகற்றி, பழைய பாலங்களை மேம்படுத்துதல் அல்லது புதுப்பித்தல், ரயில் பாதைகளை சிக்னல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கும் பணி, 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, தென் மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதனால் பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறையும் என்றனர்.