சென்னை: கோவை-திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கீழே தள்ளிய சம்பவம், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் நகை பறிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் புறப்படும் ரயில்களில் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, காவலர் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்கள் பெட்டியில் பெண் காவலரை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- ரயில்வே போலீஸ் துறையில், சென்னை மாவட்டத்தில், 23 ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்கள், 4 புறநகர் ரயில் நிலையங்களில், மொத்தம், 900 போலீசார் இருக்க வேண்டும். ஆனால், தற்போது காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 700 பேர் பணிபுரிகின்றனர். இதற்கு தேவையான 200 பேரை நியமிக்க வேண்டும். இது தவிர கூடுதலாக 500 காவலர்களை நியமிக்க வேண்டும்.
ரயில்வே காவல் நிலையங்களில் குறைந்தது 50 உதவி காவல் ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து நிலையங்களிலும் அவற்றை நிறுவ திட்டமிட்டுள்ளோம். பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்புக்காக பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக ரயில்வே காவல் துறை சார்பில் தமிழக காவல் துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
‘ரயில்வே மகளிர் பயணிகள் பாதுகாப்பு குழு’ என்ற சிறப்பு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், வழக்கமான பெண் பயணிகள், மாதாந்திர டிக்கெட்டில் பயணம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி, ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில்வே அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர். பெண் பயணிகளுக்கு அவசர உதவிக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.