சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுகொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து, தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் தொடங்க உதவி, தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு.
தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்.
இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு! இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு கைது செயயப்பட்ட தூய்மை பணியாளர்கள் 922 பேர், 12 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.