சென்னையில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். பேட்டி முடிந்தபின், ஆங்கில ஊடகங்கள் அவரிடம் தனியாக ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டனர். அதற்கு ஆ.ராசா, “அமித் ஷா இந்தியில் பேசும்போது கீழே சப்டைட்டில் ஸ்க்ரோல் போடுகிறீர்கள். அதுபோல் நானும் தமிழில் பேசியதற்கு ஸ்க்ரோல் போடுங்கள். அதை முயற்சி செய்து பாருங்கள்” என சிரித்தபடி பதிலளித்து அங்கிருந்து சென்றார்.

அமித் ஷாவின் பேச்சு பற்றி கடுமையாக விமர்சித்த ஆ.ராசா, அவர் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தும் சமாதானத்தை கெடுக்க முயல்கிறார் என குற்றம்சாட்டினார். அமைதியான தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கவே அவர் இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் மதவாதமும் பிளவுபாதமும் இடம் பெறாது எனவும் கூறினார்.
அமித் ஷா திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் பயந்துதான் இங்கு பேசியுள்ளார் என அவர் கூறினார். ஸ்டாலின் பெற்ற நற்பெயரால் பாஜகவினர் ஆபத்தாய் உணர்கிறார்கள் என்றார். மேலும், தமிழ் பற்றி பேசும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பாஜக, வட இந்திய மாநிலங்களில் பல மொழிகளை அழித்துவிட்டதாகவும், இந்திய ஒன்றுபட்ட நாடு என்ற பெயரில் மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழிக்க முயல்கிறது எனக் குற்றம்சாட்டினார். திமுகவை பார்த்து பாஜகவினர் அதிர்ச்சி அடைகிறார்கள், அதனால் தான் இங்கு திரண்டுள்ளனர் என தெரிவித்தார்.
மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடி 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்தது சுவாரஸ்யம் என கூறிய ஆ.ராசா, அதனால் திமுகவிற்கு வாக்குகள் கூடின. மோடியும், அமித் ஷாவும் அடிக்கடி வரட்டும், அதுதான் எங்களுக்கு நல்லது என்றார். பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டில் ஏற்கப்படாது என்றும், தமிழக மக்கள் முதல்வரின் பின்னால் உறுதியாக உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.