குன்னூர்: நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியை வனமகன் குழுமம் மற்றும் நீலகிரி ஹாக்கி பிரிவு இணைந்து நேற்று குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி வைத்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். நேற்று தொடங்கிய இந்தப் போட்டியை நீலகிரி ஹாக்கி பிரிவு துணைத் தலைவர் சுரேஷ் குமார் மற்றும் பொருளாளர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வனமகன் குழுமத்தைச் சேர்ந்த பிரதீப், பிரசாந்த், மனோஜ், சுகுமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரும் வீரர்களை ஊக்குவித்தார்கள். இதற்கிடையில், ஊட்டியில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்கும் போது, குன்னூரில் செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குன்னூர் பகுதியில் உள்ள ஹாக்கி வீரர்கள் மற்றும் ஹாக்கி ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். நீலகிரி ஹாக்கி பிரிவு தலைவர் அனந்த கிருஷ்ணன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை தபால் மூலம் அனுப்பியுள்ளார். நேற்று தொடங்கிய போட்டியின் இறுதிப் போட்டி 18-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நீலகிரி ஹாக்கி பிரிவு நிர்வாகிகள் கிரி, தமிழரசன், அருள் யுவன் மற்றும் பிரவீன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். போட்டிக்கு தேசிய நடுவர் சலாமத் கேலோ மற்றும் இந்திய பயிற்சியாளர் சிஜிமோன் நெல்சன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.