சென்னை: ”தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை ரயில் பாதை திட்டம், ரயில்வே மின்மயமாக்கல் திட்டம், இயற்கை பேரிடர் நிவாரணம், மறுவாழ்வு, புனரமைப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வழக்கம் போல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பட்ஜெட் அறிக்கை தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எட்டாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், மாத வருமானம் மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமற்ற வருமானப் பிரிவில் உள்ள சுமார் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வருவதைத் தடுக்கவும் மேம்படுத்தவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கணக்கிட்டால் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்கலாம் என்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை கூட பட்ஜெட் அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை. 26 கோடி விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த பட்ஜெட் அறிக்கை அமைதியாக கடந்து செல்கிறது. கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பீகாருக்கு வழங்கியது போல், இந்த ஆண்டு பீகாருக்கும் கூடுதல் நிதி மற்றும் திட்டங்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை ரயில் பாதைத் திட்டம், ரயில் பாதைகளை மின்மயமாக்குதல் போன்ற திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் நிவாரணம், மறுவாழ்வு, புனரமைப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை. இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது சாதாரண மக்களின் சேமிப்பை பாதிக்கும். விவசாயிகள் கோரும் சட்டப்படியான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பட்ஜெட் அறிக்கை முன்வரவில்லை.
பட்ஜெட் அறிக்கையில் தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் எந்த அக்கறையும் காட்டப்படவில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்கம் போல் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கும் பட்ஜெட் அறிக்கை, தாழ்த்தப்பட்ட மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது. “எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்” இரண்டு முறை செய்தாலும் கிடைக்கும்” என்று வள்ளுவர் கூறும் அறிவுரையை நிதியமைச்சர் கற்க வேண்டும்.