சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் வாபஸ் பெற வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி எதிர்பார்க்கப்படுகிறது. 29-ம் தேதி தென் தமிழகத்தில் சில இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 31-ம் தேதி வட தமிழகத்தில் சில இடங்களிலும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், உள் தமிழகத்தின் சில இடங்களிலும், கடலோரத் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 31-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளான நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான மூடுபனி காணப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.