
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்யவிருக்கிறது. இந்த மாற்றங்கள் வழியாக திட்டத்தை இன்னும் அதிகமான பெண்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய முடியும் என அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

தற்போது “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற பெயரில் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் இந்த திட்டத்தில், 1.14 கோடி பெண்கள் பயன் பெறுகிறார்கள். இந்தத் தொகையை பெற தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு சில விதிகளை வகுத்துள்ளது. குடும்ப வருட வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழாக இருக்க வேண்டும், வருமான வரி செலுத்தக்கூடாது, அரசு பணியில் இருக்கக்கூடாது என்பவை முக்கியமான நிபந்தனைகளாக உள்ளன.
கடந்த ஆண்டு மூன்று கட்ட முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நான்காவது கட்டமாக ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 9000க்கும் மேற்பட்ட புதிய முகாம்கள் நடைபெறவுள்ளன. இதன் மூலம் தகுதி உள்ளவர்களிடமிருந்து புதுப்பித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பின் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன்பு ஆவணங்கள் குறைவாக இருந்ததால் உதவித்தொகை வழங்கப்படாத பெண்கள், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவி இல்லாத வீடுகளில், தந்தை மற்றும் மகள்கள் இருப்பின், அந்த மகள்களில் ஒருவருக்கு உதவித் தொகை வழங்கப்படும். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தனி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், வயதான பெற்றோருடன் வசிக்கும் பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இந்த உதவித் தொகையை பெற தகுதி அளிக்கப்படும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஒரே வீட்டில் ஒருவருக்கே மட்டுமே இந்த உதவி வழங்கப்படும் என்ற பழைய விதிமுறையில் தற்போது சற்றே தளர்வுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூதாட்டி ஒருவர் முதியோர் பென்ஷன் பெறும் நிலையில், அந்த வீட்டில் உள்ள மற்றொரு பெண் ரூ.1000 தொகையை பெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தில் கூடுதலாக 10 முதல் 15 லட்சம் பெண்கள் சேர்க்கப்படலாம் எனவும் தெரிகிறது.
இந்த திட்டம் தமிழகத்தில் பாராட்டை பெற்றுள்ளதால், பிற மாநிலங்களிலும் இது மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் தேர்தலையொட்டி மக்களிடம் நல்ல ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் அமையப்போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.