தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நாளை திருநெல்வேலி வருகிறார். ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார் மற்றும் டாடா சோலார் தொழிற்சாலையை திறந்து வைப்பார். பல்வேறு மாவட்டங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டுள்ள செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நெல்லையில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மொத்தம் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். குறிப்பாக கங்கைகொண்டானில் ரூ.4,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள டாடா சோலார் தொழிற்சாலையை நாளை மதியம் திறந்து வைக்கிறார். நாளை மறுநாள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 40 ஆயிரம் பேருக்கு பட்டாவும், 20 ஆயிரத்து 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் முதல்வர் வழங்குகிறார். இதற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டப் பொறுப்பாளர் கே.என். நேரு ஆய்வு செய்தார். ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் திமுக நிர்வாகிகளை முதல்வர் நாளை சந்திக்கிறார். நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரம் பேர் திமுகவில் இணையவுள்ளனர்.
வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் மீனவர்கள் மற்றும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிவார். நாளை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து காரில் நெல்லை வரும் முதலமைச்சரை வரவேற்க, கே.டி.சி.நகர் பாலம், கங்கைகொண்டான், நாரணம்மாள்புரம், பாளையங்கோட்டை மார்க்கெட் திறப்பு விழா செல்லும் வழிகளில் திமுகவினர் தயாராகி வருகின்றனர்.