செப்டம்பர் 7-ம் தேதி திருநெல்வேலியில் தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பா.ஜ., சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தி தன் மகன் ராகுலை பிரதமராக்க விரும்புகிறார் என்றும், ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை முதல்வராக்க விரும்புகிறார் என்றும் விமர்சனம் செய்தார். மேலும் இந்த இருவரின் கனவும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டிலும் எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் விவாதங்களை தடுக்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
அமித் ஷாவின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரவும், வாக்காளர் பட்டியலில் திருட்டு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், மாநில மாநாடு நடத்தப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்திக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, கார்கே மற்றும் பிரியங்கா இருவரும் திருநெல்வேலி மாநாட்டில் பங்கேற்பது சாத்தியமற்றதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.