நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. சென்னையின் மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயது மோகன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், சிகிச்சை பெறும் நிலையில் அவர் உயிரிழந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா பரவியபோது மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். லட்சக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்புகளும் தொடர்ந்தன. வைரஸ் உருமாறி புதிய வகைகளாக தாக்கியதாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.
தற்போது தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் தற்போது இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தெரிகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மற்றும் கேரளா மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரும் நிலையில், தமிழகத்தில் நேற்று முதல் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அறிவித்தபடி, கடந்த வாரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், பொது இடங்களில் செல்லும் போது சோதனையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமெனும் அறிவுறுத்தலும் வெளியாகியுள்ளது.

மோகன் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நிலைமை மோசமாகியதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது முதல் மரணம் என்றாலும், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொற்று மீண்டும் பரவத் தொடங்குவதை உறுதிப்படுத்துகிறது.
மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகி வருகின்ற நிலையில், தனிமைப்படுத்தல், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பழைய நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.