திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில் பாமக துவங்கிய 36 ஆண்டுகளாக பின்தங்கிய மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். சமீபத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டை பார்த்து எதிர்க்கட்சிகள் ஆச்சரியத்திலும், பீதியிலும் உள்ளதாகவும், அந்த மாநாட்டை தடுக்க வழக்குகள் தொடுக்கப்பட்டும், கட்சி அதை வெற்றிகரமாக நடத்தியதாகவும் கூறினார்.

தமிழக மக்களுக்கு உண்மையான சமூக நீதியை வழங்க வேண்டும் என்பதே பாமக நோக்கம் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தபோது, சட்டமன்ற கூட்டத்தை கூட நடத்துவேன் என உறுதியளித்த ஸ்டாலின், தற்போது மத்திய அரசின் மீது பொறுப்பு தள்ளுகிறார் என தெரிவித்தார். பாமக வளர்வதைத் தடுக்க, நேரில் எதிர்கொள்ள முடியாததால் சூழ்ச்சிகளை திமுக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் வியாபாரம் மாநிலம் முழுவதும் வீதி வீதியாக நடக்கிறது என்றும், தமிழ்நாட்டின் பெயரை “குடிகார நாடு” அல்லது “போதை நாடு” எனவே மாற்றிவிடலாம் என கடுமையாக விமர்சித்தார். மேலும், கல்லணை நீரை திறப்பது அதிகாரிகளின் வேலை, அதை முதலமைச்சர் PR நடவடிக்கையாக செய்கிறார் எனவும் புகார் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு பணம் வேண்டாம், ஆனால் சமூக நீதி வேண்டும் எனவும், மகிழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி மக்கள் வாழ்விலும் இருக்க வேண்டும் என சாடினார். மேலும், “இன்னும் 8 மாதத்தில் இந்த கொடுங்கோல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்” என்ற வரியுடன் முடித்தார்.