சென்னை: வேலைவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். இது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) துணை இயக்குநர் பிரசாந்த் காரத் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:-
ஏஐசிடிஇ மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் மற்றும் அதுதொடர்பான தகவல் தொடர்புகளில் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய மோசடிகள் போலி மின்னஞ்சல் முகவரிகள், ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை இழக்க நேரிடும். இது ஏஐசிடிஇயின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.

எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற மோசடி விளம்பரங்கள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து அதைக் கையாளும் போது கவனமாக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
அதேபோல், கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மின்னஞ்சல்கள் பெறப்பட்டால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற போலி விளம்பரங்கள் குறித்து மற்ற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அறிந்தால், உடனடியாக சைபர் கிரைம் பிரிவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.