திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், ஷார்ஜா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளுக்கான விமான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இன்று ஷார்ஜா மற்றும் துபாய் செல்லும் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இன்று மதியம் 1.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு விமானங்கள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், திருச்சி விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.