ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் முழுவதும் உள்ள நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெரியாறு மற்றும் வைகை ஆறுகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 27 குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த 27 திட்டங்களுக்கும் ஆற்றில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. இது தவிர மதுரை மாநகராட்சிக்கு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுவதால் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குன்னூரில் வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மதுரை நகரின் குடிநீர் தேவைக்காக ஆற்றில் வரக்கூடிய பெரும்பாலான தண்ணீர் எடுக்கப்பட்டதால், தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு சீராக தண்ணீர் வழங்க முடியவில்லை என்றும், இதனால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் ஆற்றில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் தற்காலிகமாக கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கருட் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் இந்திர கோபால், வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உத்தம்பாளையம் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.