சென்னை: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பிரபல திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று திரையரங்கில் ஆய்வு செய்தனர். அப்போது சினிமா ஹாலில் காலாவதியான உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேரளாவில் இருந்து இந்த காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் பாப்கார்ன் வினியோகிக்கப்பட்டது. நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குளிர்பானங்களின் காலாவதி தேதி கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்தாலும், தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக கேன்டீன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல், சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலாவதியான உணவுப் பொருட்களை ஆய்வு செய்ய சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் அனைத்து திரையரங்குகளுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தும் என்றார்.