இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், 15-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், 16-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும் நாளையும் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு பதிவுகளின்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், சென்னையில் உள்ள வளசரவாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.