சென்னை: மத்திய-மேற்கு வங்கக்கடலில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது. மேலும், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய-மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தெற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-ம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், நாளை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், காரைக்காலில் அதிகபட்சமாக 11 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.