சென்னை : ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, அரசு சார்பில் விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991 – 96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், ஜெயலலிதா வீட்டிலிருந்து தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவைகள், காலணிகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்வழக்கில் நீதிபதி குன்ஹா, கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தார். இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்திருந்தார்.
இத்தீர்ப்பை கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இவ்வழக்கு நிறைவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் கர்நாடக அரசுக்கு வழக்கை நடத்திய தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, கடந்த 2023-ல் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள, ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கவும், வழக்கு நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கர்நாடக கருவூலத்தில் இருந்து நகைகள், சொத்து ஆவணங்கள் அடங்கிய 6 பெட்டிகள் கடந்த வாரம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்படி, 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன. மேலும், சொத்துப் பட்டியலில் இருந்த 468 தங்க, வைர நகைகள் 27 கிலோ அளவில் ஒப்படைக்கப்பட்டன.
இப்பொருட்கள் அனைத்தும் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதை ஏலம் விடுவது தொடர்பாக ஆலோசிக்க உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்க இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.