இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரிதான் முக்கிய வருவாய் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குப்பை மற்றும் திடக்கழிவுகளை அகற்றுதல், தெருவிளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84 (1)ன்படி, சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டின் முதல் பாதி தற்போது தொடங்கியுள்ளது. எனவே, சொத்து உரிமையாளர்கள் தங்களின் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.