தஞ்சாவூர்: உணவுத் துறையில் சமூக நலனைப் பாதுகாக்கும் தீர்வுகளை ஏற்படுத்துவது அவசியம் என்றார் கர்நாடக மாநிலம் குடகு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அசோக் எஸ். அலூர்.
தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்ளேனம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 31 ஆவது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
உணவுத் துறையில் ஊட்டச்சத்து குறைபாடு, பசி, உடல் பருமன் போன்ற சவால்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு உறுதி மற்றும் தரநிலைகளைப் பேணுதல் நாட்டின் முக்கிய சவால்களாக இருக்கின்றன. வெறும் கலோரி கணக்கீட்டில் மட்டுமே சுருங்காமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சுயவிவரத்தை எடுத்துரைக்கும் வகையில் நவீன கருவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
உணவியல், உணவு வளங்களின் மறுசுழற்சி மற்றும் உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை ஊக்குவிப்பதற்கு உணர்வு வடிவமைப்பை மையமாகக் கொண்ட காஸ்ட்ரோனாமிக் பொறியியல் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தொழில்முனைவோர் முயற்சிகள் வெறும் வணிக வளர்ச்சிக்காக அல்லாமல், சமூக நலனையும், எதிர்கால தலைமுறைகளின் நலனையும் பாதுகாக்கும் தீர்வுகளை உருவாக்குவது அவசியம் என்றார் அசோக் அலூர்.
தொடக்க விழாவுக்கு இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்மேளனத் தலைவர் ஆஷிதோஷ் ஏ. இனாம்தார் தலைமை வகித்தார். இக்கருத்தரங்கத்தை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கிரிதர் பர்வதம் தொடங்கி வைத்தார்.
கட்டுரைத் தொகுப்பை இந்திய நச்சுவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பாஸ்கர் நாராயண் வெளியிட்டார். தொடக்க அமர்வை தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன், ஆராய்ச்சி தொகுப்புகளின் சுவரொட்டி அமர்வை தஞ்சாவூர் நிப்டெம் இயக்குநர் வி. பழனிமுத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, சம்மேளனத்தின் கெüரவ செயலர் பசவராஜ் முந்தலாமணி வரவேற்றார். தஞ்சாவூர் கிளைத் தலைவர் வி.ஆர். சினிஜா நன்றி கூறினார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைகிறது.