ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் விடுபட்ட சான்றிதழ்களை வரும் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணித் தேர்வில் நேர்காணல் இல்லாமல் பங்கேற்க ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அதில், வேளாண் அலுவலர், பாதுகாவலர், உதவி சுற்றுலா அலுவலர் உள்ளிட்ட 19 வகையான பணியிடங்களில் சில சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படாததும், பழுதடைந்தும் இருப்பது கண்டறியப்பட்டது. அத்தகைய விண்ணப்பதாரர்கள் விடுபட்ட ஆவணங்களை முழுமையாக பதிவேற்றம் செய்து, குறைபாடுகளை சரிசெய்து, ஏப்ரல் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் மீண்டும் பதிவேற்றம் செய்ய கடைசி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் பதிவு பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணையதளத்தில் அவர்களின் ஒரு முறை பதிவு (OTR) மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.