சென்னை: தமிழகத்தில் கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் காசிமேட்டில் இருந்து ஆழ்கடலுக்கு விசைப் படகுகள் செல்லவில்லை. மீனவர்கள் சிறிய மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் அருகில் உள்ள கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவே மீன்கள் வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து மீன் வாங்கி விற்பனை செய்கிறார்களா என மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

எனினும், இந்த சோதனையில் வெளிநாட்டு மீன்கள் எதுவும் சிக்கவில்லை. மேலும் நேற்று காசிமேட்டில் பெரிய மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் ரூ.1400-க்கு விற்பனையானது. ஷீலா, சங்கரா, கொடுவா மீன்கள் கிலோ ரூ. 800, பால் சுறா ரூ. 700, நவரை மற்றும் காணாங்கத்தை ரூ. 500, மற்றும் நெத்திலி, கடுமா மற்றும் நண்டு ரூ. 400 -க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதனால் பெரிய மீன்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களும் ரூ. 100 முதல் ஒரு கிலோ ரூ. 200 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டன. மேலும் நேற்று அமாவாசை என்பதால் காசிமேட்டில் கூட்டம் குறைவாக இருந்தது.