கோவை: முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணிக்கு சமீபத்தில் வந்த கொலை மிரட்டல் கடிதம், அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை சுகுணாபுரத்தில் வசித்து வரும் அவருக்கு, மர்ம நபர்கள் அனுப்பிய அந்த கடிதத்தில், கருப்பு பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லையெனில் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என குற்றச்சாட்டுகள் மற்றும் மிரட்டல்களுடன் கூடிய தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

கடிதத்தில், காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், குறிப்பிட்ட இடத்துக்கும் நேரத்துக்கும் பணம் பையில் வைத்து கொண்டு வர வேண்டும் என கூகுள் மேப்புடன் இணைத்து அனுப்பியிருப்பது, வழக்கமான மிரட்டல்களுக்கு மாறாக திட்டமிட்ட வகையிலான நடவடிக்கை எனக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அதிமுகவின் வழக்கறிஞர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், வேலுமணிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அதிமுக அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னோக்கி பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்த வேலுமணி, அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, கோவை மாநகராட்சி வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நகரின் அடிப்படை வசதிகள் இல்லை. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எந்த நீர் நிலைகளும் தூர்வாரப்படவில்லை. வருகிற திங்கள் அன்று கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நிலைமை குறித்து விளக்கம் கோர இருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த முக்கியத் திட்டமும் அமலாக்கப்படவில்லை என்றும், மத்திய அரசிடமிருந்து அதிக நிதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசு பெற்றிருந்தது என்றும் குறிப்பிட்டார். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் பலர் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் போராட்டம் முடிவுக்கு வர, மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனவும் கூறினார்.
கடிதம் சம்பவம் குறித்து மேலும் பேசிய வேலுமணி, அந்த மிரட்டல் தொடர்பாக காவல்துறையிடம் வழக்கறிஞர் அணி புகார் அளித்ததையும், ஆனால் அது விசாரணை முடிவுக்கு வரும் முன்பே ஊடகங்களில் பரப்பப்பட்டதையும் வருத்தமுடன் தெரிவித்தார். இது போலவே எந்தப் பொது நபருக்கும் மிரட்டல் வந்தாலும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் அரசியல் சூழலில் வேலுமணியின் பாதுகாப்பு விவகாரத்தையும், சட்ட ஒழுங்கு நிலவரத்தையும் மீண்டும் பேசப்படும் முக்கிய அம்சமாக மாற்றியுள்ளது.