கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதன்படி, பூங்குன்றன் நேற்று காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்பி மற்றும் கூடுதல் எஸ்பி ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர். “கோடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்கள் மற்றும் பங்களா வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்த பகுதிகள் குறித்து பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது” என்று போலீசார் தெரிவித்தனர்.