கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் காவல் அதிகாரி வரதராஜன் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி உட்பட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையமும் விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம், தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைமைக்கும் எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்ட மூவர் மீது காவல்துறையினர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேநேரத்தில், கரூர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், யூடியூப் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அதில் முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறித்து தவறான மற்றும் அவதூறான காணொளிகளை பார்த்துள்ளார். பார்த்த காணொளிகளை வைத்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், அரசியல் விமர்சகரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான வரதராஜன் மீது அரவக்குறிச்சி போலீசார் அவதூறு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.