நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக, அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி 2-ம் வகுப்பு வரை கற்பிக்கப்பட வேண்டும். அது முடியாவிட்டால், மாநில மொழியே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கலாம், மேலும் விரும்பினால், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அதே பயிற்றுவிக்கும் மொழியைத் தொடரலாம் அல்லது வேறு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கீழ் 30,858 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 2.82 கோடி மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர், மத்திய கல்வி வாரியம் இந்த புரட்சிகரமான முடிவை செயல்படுத்துவதற்கான முதல் படியை எடுத்துள்ளது. 2-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்குத் தேவையான NCERT புத்தகங்கள் தயாராக இருப்பதும், 5-ம் வகுப்பு வரை புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதும் வரவேற்கத்தக்கது. மாணவர்களின் தாய்மொழியை அடையாளம் கண்டு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

மேலும் வரும் ஜூலை மாதத்திலேயே அதை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தாய்மொழிக் கல்விக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தாலும், குழந்தைகள் தங்கள் தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வியைக் கற்கும்போது அவர்களின் முழுத் திறனையும் அடைய முடியும் என்பதை பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்ட மாணவர்களுக்கு வகுப்புகளை ஒதுக்குவதும் ஆசிரியர்களை நியமிப்பதும் கடினம் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஒருபுறம் இந்தி திணிப்பு குறித்த அச்சம் வெளிப்படுத்தப்பட்டாலும், தாய்மொழிக் கல்வியின் நன்மைகள் சிறிது காலத்திற்குப் பிறகுதான் உணரப்படும். நாட்டின் மிகப்பெரிய கல்வி வாரியமான சிபிஎஸ்இ, ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்து இந்த கல்வியாண்டிலேயே அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை இன்னும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. நீதிபதி முருகேசன் குழு தனது வரைவு அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கல்வியாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸும் இந்தக் கவலையை வெளிப்படுத்தி, மாநிலக் கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாடு கல்வித் துறையில் பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதால், அதனுடன் இணைந்து செயல்பட வேண்டும் அல்லது மாற்றாக, சிறந்த கல்விக் கொள்கையை வகுத்து, மாணவர்கள் கல்வியில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்ய தாமதமின்றி அதை செயல்படுத்த வேண்டும். இரண்டையும் செய்யாமல் அரசு அமைதியாக இருப்பது நல்லதல்ல.