சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள எம்.பி. துரை வைகோ, தான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கடந்த நான்கு ஆண்டுகளாக நேரடி அரசியலில் செயல்பட்டு வருகிறேன். எதுவாக இருந்தாலும் பதிலளிக்கும் பழக்கமுள்ளவன் தான் நான். ஆனால் தற்போது இது ஒரு உட்கட்சி விவகாரம் என்பதால், முடிவெடுப்பது கட்சி தலைமை மற்றும் நிர்வாகிகளின் பொறுப்பு என்றும் கூறினார்.
தாம் பதவியை விலகியதற்கான காரணங்களை அறிவிப்பு அறிக்கையிலேயே தெளிவாகக் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என்ன நிலைபெறுகிறார்கள் என்பது தெளிவாகும் என்றும் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், கட்சி பதவியில் தொடர முடியாது என்ற எண்ணத்தில்தான் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும், கட்சியில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதே தனது மனநிலை எனவும் துரை வைகோ கூறினார்.
நாளைய நிர்வாகக் குழுவின் முடிவே இறுதி முடிவாக அமையும் என்றும், தான் எடுத்த முடிவை கட்சிக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் தொடர்ந்து ஒரு தொண்டனாகவும், திருச்சி மக்களின் பிரதிநிதியாகவும் செயல்படப் போவதாக உறுதியளித்தார். மேலும், கடந்த நாட்களில் அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட தலைவர்கள் தன்னை சந்தித்துள்ளதாகவும், அவர்களிடம் தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
தான் கட்சியில் இணைந்தபோது விருப்பமில்லாமல், தொண்டர்களின் பாசத்திற்காகத்தான் கட்சிக்கு வந்ததாகவும், தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற தனது நிலைப்பாடும் தொடர்ந்ததே என்றும் அவர் குறிப்பிட்டார்.
2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2024 லோக்சபா தேர்தலிலும் வேறு ஒருவரை நிறுத்த வேண்டுமென்ற தன் விருப்பத்தை கட்சியிடம் தெரிவித்திருந்தாலும் கட்சி தான் நாமினேட் செய்தது என்றும் கூறினார்.
தான் இந்த பதவியில் இருந்து செயற்பட இயலவில்லை என்றும், சில முட்டுக்கட்டைகள் இருப்பதால் தான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்தார். கட்சித் தலைவர் வைகோ தனது அழைப்பினை ஏற்று சந்திக்க இருக்கிறேன் என்றும் கூறினார்.
இவ்வாறு துரை வைகோ தனது மனநிலை மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினார்.