மேட்டூர் / தர்மபுரி: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்தது.
மேட்டூர் அணையில் நேற்று காலை வினாடிக்கு 35,250 கன அடியாக இருந்த நீர்வரத்து நண்பகல் நிலவரப்படி 30,250 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 9 மணிக்கு வினாடிக்கு 35,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

கால்வாய் பாசனத்திற்காக 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. தர்மபுரி மாவட்டம், ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கடந்த 9-ம் தேதி காலை வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 10-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் 32 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
நேற்று காலை, நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக பதிவானது.