சென்னை: வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்துக் குவித்த வழக்கில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996 முதல் 2001 வரை பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2002-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள், சகோதரர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து 2007-ல் வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிட்டார்.

துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் வாதாடினர். அவர்கள் தங்கள் வாதத்தில், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களின் தனிப்பட்ட தொழில் மற்றும் குடும்ப வருமானத்தை அமைச்சர் துரைமுருகனின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறை காட்டியிருக்கிறது. வழக்கின் தொடர்புடைய காலத்திற்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் குடும்பத்தை அமைச்சரின் பினாமி என்று குறிப்பிட எந்த ஆதாரமும் இல்லை.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாகவும் முறையான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையும் அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும், ஆனால் அதிகார வரம்பு இல்லாத புலனாய்வாளர் இந்த வழக்கை விசாரித்துள்ளார். வழக்கை தொடர சட்டப்படி அனுமதி பெறவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. அந்த உத்தரவுக்கு எதிரான மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, எனவே இந்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறையின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறுஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டார். 1996-2001-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு என்பதால் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.