சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணைகளை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தொடர்பாக மனிதவள மேலாண்மை துறை மற்றும் சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்டு ஜனாதிபதியிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரை 4 முறை தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து கடிதங்களுக்கும் உரிய விளக்கத்துடன் பதில் அளித்துள்ளோம். உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள பதில்களால், தமிழகத்துக்கு மத்திய அரசு நீட் விலக்கு அளிக்கும் சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.
குறிப்பாக மத்திய அரசு 4-வது முறையாக விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தில் 2 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. முதலில், நீட் தேர்வை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தமிழகம் ஏன் விலக்கு கேட்கிறது?
நீட் தேர்வு இல்லையென்றால் கல்வியின் தரம் குறையும். நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தினால் தான் கல்வித்தரம் உயரும்,” என்றார். இதற்கு தமிழக அரசு, “நீட் தேர்வு இல்லாமல் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மையங்கள் போன்ற வசதிகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. பயிற்சி மையங்கள் நீட் தேர்வால் பயனடைகின்றன, தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் உயர்தரமானது. எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பதில் அளித்துள்ளோம்.
அடுத்ததாக, ‘‘தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா, நீட் தேர்வை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரானது’’ என்று கேட்டனர். அரசு தரப்பில், “மத்திய அரசின் நீட் சட்டத்தில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன. அந்த சட்டத்தால் நமது மாணவர்கள் பாதிக்கப்படலாம்.
நீட் தேர்வு தொடர்பாக எங்களுக்குள் முரண்பாடு இருப்பதால் எங்களுக்கு நீட் தேவையில்லை என்று கூறியுள்ளோம். மேலும், தமிழக அரசின் இந்த மசோதா, தமிழக மாணவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாகும்” என்றார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்தும், தமிழகத்துக்கு உரிய மானியத் தொகையை முறையாக வழங்குவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லும் போது பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளார்.
குறைந்த பட்சம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.