சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தனியார் கல்லூரி பேருந்து விபத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சென்னை விமான நிலையம் அருகே உள்ள பல்லாவரம் மேம்பாலத்தில் நேற்று காலை தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையம் மற்றும் குரோம்பேட்டை இடையேயான ஜிஎஸ்டி சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் 3 கி.மீ. தூரம் வரிசையாக நின்றன. இதனால், அலுவலகம் மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் சிரமப்பட்டனர். பல விமானப் பயணிகள் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களை தங்கள் மொபைல் போன்களில் தொடர்பு கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர். விமான நிறுவனங்கள் பயணிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கின.
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, நேற்று காலை சென்னையில் இருந்து கவுஹாத்தி, ஹைதராபாத், தூத்துக்குடி, கொல்கத்தா, புனே, ராஜமுந்திரி, மதுரை, கோலாலம்பூர், மஸ்கட் மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு புறப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அரை மணி நேரம் வரை தாமதமாகின.