சென்னை : சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் வட மாநில கும்பல் சிக்கியது எப்படி? என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை சைதாபேட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலை ஆறு மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஒரு மணிநேரத்திற்குள் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு, புனித தோமையர் மலை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலை 6 மணியளவில் திருவான்மியூர், இந்திரா நகர் பகுதியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த 54 வயது பெண்மணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 8 சவரன் நகையைப் பறித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் மனு கொடுத்துள்ளார். அடுத்து சாஸ்திரி நகரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 66 வயது மூதாட்டியிடம் இருந்து 4 கிராம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதாக பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, சைதாப்பேட்டை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வயதான பெண்களைக் குறிவைத்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக அங்குள்ள காவல் நிலையங்களில் புகார் பதிவானது.
இதில் சில சம்பவங்கள் அடையாறு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு ஹைதராபாத் செல்வதற்குத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வைத்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது.
இதையடுத்து, விமான நிலையத்தில் வைத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள், சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாக அறியப்பட்டதன் அடிப்படையில் தனிப்படையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை விமான நிலைய நுழைவு வாயிலிலும் மற்றொரு நபரை விமானத்தின் உள்ளேயும் சென்று கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இரண்டு பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு முன்னரும் இதேபோல தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை மூன்று மணிநேரத்தில் காவல்துறை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.