சென்னையில் ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் மூலம் மாணவர்களின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் திறன்களை வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்தல், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த மற்றும் திறமையான இளைஞர்களை உருவாக்குதல், ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பெண்கள் உயர்கல்வி பெறுவதற்காக ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 1,000 ரூபாய் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இதன் காரணமாக, உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஏழை மற்றும் எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 2025-26-ம் ஆண்டுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், சென்னை மாவட்டத்தில் ஆலந்தூர், செங்கல்பட்டு – செய்யூர், விழுப்புரம் – விக்கிரவாண்டி, பெரம்பலூர் – கொளக்காநத்தம், தஞ்சாவூர் – திருவிடைமருதூர், திருவாரூர் – முத்துப்பேட்டை, நீலகிரி – குன்னூர், திண்டுக்கல் – நத்தம், சிவகங்கை – மானாமதுரை, தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில், பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், தொழில் மற்றும் வணிக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர்கல்வி செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (தொழில்நுட்பப் பிரிவு) வெ.சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.