விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படத்தை சீமான் பொது வெளியில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே. சார்லஸ் அலெக்சாண்டர்: சீமான் 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த மோதலின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை களமுனையில் சந்தித்ததாகவும், ஏகே 47 துப்பாக்கி மூலம் போர்ப் பயிற்சி பெற்றதாகவும் சீமான் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி தமிழகத்தில் வன்முறையை தூண்டும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துகிறார்.
அவர் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பொது இடங்களில் பயன்படுத்தியதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தியை கொன்றோம் என்று சீமான் வெளிப்படையாக கூறியுள்ளார். எனவே தடை செய்யப்பட்ட பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.