இன்று முதல் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்னிந்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

25 மற்றும் 26-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும். தமிழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், 26 மற்றும் 27-ம் தேதிகளில் சில இடங்களிலும் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பதிவின்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.