தமிழகத்தில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 செ.மீ., மழையும், சிற்றாறு, பேச்சிப்பாறையில் 1 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

சமவெளிப் பகுதியில் அதிகபட்சமாக சேலத்தில் 99 டிகிரியும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 68 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.