விருதுநகர் மாவட்டத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டது. இதன் பின்னணியில் ராணுவம், விமானப்படை, கடற்படை மூலமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து, உலக நாடுகளிடையே இந்தியாவின் நடவடிக்கையை எடுத்துக்காட்டாக மாற்றியது.

இந்த பரபரப்பான சூழலில், விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், எனது தலைமையில் 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போர் செய்யத் தயார்” என கூறியுள்ளார். இதற்காக யுத்த பயிற்சி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேச பாதுகாப்பில் அதிமுகவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, நீட் ரத்து, மதுக்கடை மூடல், வாழ்வாதாரச் சிக்கல்கள் போன்றவற்றில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அவரின் கூற்றுப்படி, தற்போதைய திமுக ஆட்சியில் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து விட்டன, பழைய அதிமுக ஆட்சியில் இருந்த நிம்மதி இப்போது இல்லை எனவும் கூறினார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்றும், அடுத்த தேர்தலில் மக்கள் தங்களது வாக்குகள் மூலம் தக்க பதிலடி தருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி நிலைபெறும் என கூறிய அவர், திமுகவிற்கு குரு பெயர்ச்சி இறங்குமுகத்தை காட்டும் என்றும் கடைசியில் வலியுறுத்தினார்.