சென்னை: தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு, இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்காததால்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதில் தமிழக அரசு அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. 2015 முதல் 2022 வரை, தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மொத்தம் 21,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள.
மேலும் 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்துள்ளன, அதில் குற்றவாளிகள் 2023 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். 30% வழக்குகளில், அதாவது 6110 வழக்குகளில், சாட்சியங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர 12 ஆயிரத்து 170 வழக்குகள், அதாவது 60% வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதில் பல வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் அனைத்து நடைமுறைகளையும் முடித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருப்பதற்குக் காரணம், போதிய அளவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாததும், விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படாததும்தான்.
இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். 300க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால், இரண்டு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் குறைந்தபட்சம் 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை 20 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் நீதிமன்றங்களில் இது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.
தென்காசி மாவட்டத்தில் புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும், இன்று வரை அங்கு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திற்கான போக்சோ சிறப்பு நீதிமன்றம் 2021ல் அறிவிக்கப்பட்டது.ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில்தான் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தமிழக அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்கு விசாரணையில் ஆர்வம் காட்டாததால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுவதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். “குற்றவாளிகள் தப்பிப்பதால் தான் குற்றவாளிகள் மத்தியில் பயம் குறைகிறது, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் அக்கறை காட்டுவது இதுதான் அழகு? சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், இதுபோன்ற குற்றங்களைச் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய, தமிழகத்தில் தேவையான அளவு போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.