சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இப்பட்டியலை வெளியிட்டார். இந்த ஆண்டு மொத்தமாக 11,350 மருத்துவ இருக்கைகள் உள்ளன. அதில் 9,200 எம்பிபிஎஸ் மற்றும் 2,150 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கென வைக்கப்பட்டுள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 496 இடங்கள் வழங்கப்படுகின்றன.
பிடிஎஸ் படிப்பில் அரசு கல்லூரிகளில் 250 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்கள் உள்ளன. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 126 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக 72,943 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். சேலம் மாணவர் அபினீத் நாகராஜ் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் 9 இடங்களிலும் மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். 10வது இடத்தில் மட்டும் ஒரு மாணவி உள்ளார். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது.