நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய பலத்த காற்று காரணமாக, அருமநல்லூர், சீறமடம், ஞாலம், கொக்கல் விளாகம், அழகியபாண்டியபுரம், திடல், ஈசாந்திமங்கலம், தெள்ளந்தி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக சாய்ந்தன. முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நேற்று வாழைகளின் சேதத்தை ஆய்வு செய்தார்.
கொக்கல் விளாகம், திடல் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வாழைகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்திரலேகா, வருவாய் ஆய்வாளர் பீர்முகமது ராபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் அப்போது உடனிருந்தனர். பின்னர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இரண்டு நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஞானலம் கொக்கல்விளாகம், அருமநல்லூர், அந்தரபுரம், திடல், அழகியபாண்டியபுரம், தெரிசனகோப்பு, ஈசாந்திமங்கலம் மற்றும் தெள்ளந்தி ஆகிய பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதாகக் கூறினார்.

இதனால், விவசாயிகள் முற்றிலும் துயரத்தில் உள்ளனர். இழப்பீடாக 1 ஏக்கருக்கு 6 ஆயிரத்து 800 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் வாழை விவசாயிகள் 1 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட பல லட்சம் செலவிட்டதால், இந்த இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இருக்காது. வாழை மற்றும் நெல் விவசாயிகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்போது, அதற்கான இழப்பீடு பெற காப்பீடு செய்கிறார்கள்.
இதுபோன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்போது, பல காரணங்களைக் கூறி இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.