சென்னை: ”வரும் கோடை காலத்தில், தமிழகத்தில் மின் வினியோகத்தை பூர்த்தி செய்ய, மத்திய அரசிடம் இருந்து, கூடுதலாக, 3,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்,” என, மத்திய அரசுக்கு, மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை செயலர் பங்கஜ் அகர்வால் மற்றும் நிலக்கரித்துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோரின் கூட்டுக் குழு கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”தமிழகத்தில் வரும் கோடை காலத்தில் மின் வினியோகம் செய்ய, மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், குறுகிய காலத்துக்கான அதிகாரத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். பின்னர் தமிழ்நாடு மின் வாரிய திட்டங்களுக்கு நிதி வழங்கி வரும் மின் நிதி கழகம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழக அதிகாரிகளை சந்தித்து திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தினார். இதில் உத்தரபிரதேச மாநில மின்துறை கூடுதல் தலைமை செயலாளர் நரேந்திர பூஷன் உள்பட பல்வேறு அதிகாரிகள் ஈடுபட்டனர்.