சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் அமைப்பது தொடர்பான திட்டம் பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே இருந்த நிலையில், இப்போது அது செயல்முறையாக முன்னேறும் கட்டத்திற்கு வந்துள்ளது. மெரினா கடற்கரை என்பது தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவிற்காக இங்கு வருகின்றனர். குறிப்பாக வார இறுதிகளில் மற்றும் அரசு விடுமுறைகளில் மக்கள் கூட்டம் இரட்டிப்பாக காணப்படுகிறது.

மெரினா கடற்கரையை மேலும் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றும் நோக்கில், ஏற்கனவே நீச்சல் குளம், பூங்கா, நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்தே, பெரும் கோரிக்கையாக எழுந்தது ரோப் கார் சேவையை அமைக்க வேண்டும் என்றது. பழனி முருகன் கோவிலில் நடைமுறையில் உள்ள ரோப் கார் சேவை மாதிரியாக, பெசன்ட் நகர் முதல் மெரினா கடற்கரை வரை ரோப் கார் இயக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த கோரிக்கைகளை பரிசீலித்த சென்னை மாநகராட்சி, ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. கடந்த ஆண்டு இந்த திட்டத்துக்கான டெண்டர் கோரப்பட்டது. வடிவமைப்பு, தொழில்நுட்ப ஆலோசனை, மதிப்பீடு உள்ளிட்ட பல அம்சங்களுக்கான ஆலோசகர்களிடம் இருந்து அறிக்கைகள் பெற்றும், திட்டம் நகர்வில் கூடுதலாக முன்னேறவில்லை.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியாவின் தலைமையில் நடைபெற்றது. இதில் 14வது வார்டைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் செம்மொழி, மெரினா ரோப் கார் திட்டம் குறித்து நகரத்திற்கே பெரும் பயன்பாடாக இருக்கும் என்பதையும், அந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த மேயர் ப்ரியா, மெரினா ரோப் கார் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தற்போது தயாராகி வரும் நிலையில், அது முழுமையாக வந்தவுடன் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட கட்டாய தேவைகளுக்கும் உடனடியாக விண்ணப்பிக்கப்படும் என்றும், அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் உறுதியாக கூறியுள்ளனர்.
இந்த முன்னேற்றம் சென்னை மக்களுக்கு மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு புதிய அனுபவத்தையும், நகர்ப்புற போக்குவரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது திட்டம் நடைமுறைப்படுத்தும் முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால், எதிர்வரும் காலங்களில் மெரினா கடற்கரையில் ரோப் கார் ஓடுவதை நேரில் காணும் வாய்ப்பு சென்னையாசிகளுக்கு உருவாகியுள்ளது.