சென்னை: போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி பாக்கி வைத்திருப்பதால், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கடன் வழங்க மறுத்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்களின் கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சங்கம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாதந்தோறும் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சங்கச் செயலர் (பொறுப்பு) கு.உமாசந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்., மாதத்தில், எம்.டி.சி., மற்றும் எஸ்.இ.டி.சி., கிளப் உறுப்பினர்களிடம் மட்டுமே கடன் விண்ணப்பங்கள் பெறப்படும். விழுப்புரம் போக்குவரத்து கழகம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் வசூலான ரூ. 13 கோடி ரூபாய், இணைப்புச் சங்கங்கள் மூலம் கூட்டுறவு சங்கத்துக்கு மாற்றப்படவில்லை.
எனவே, இணைந்த மாவட்ட உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல், கணக்குகளை முடித்து வைப்பது போன்ற கூட்டுறவு கடன் சங்க நடவடிக்கைகள், நிலுவைத் தொகை கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. நிலுவைத் தொகை கிடைத்தவுடன் கடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், நிலுவைத் தொகை வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.