அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி நீண்ட வருடங்கள் அதனைச் செயல்படுத்திய நடிகர் மற்றும் அரசியல்வாதி சரத்குமார், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அந்தத் தேர்தலில் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்த பிறகு, தனது கட்சி மற்றும் தொண்டர்களுக்கு எந்தவிதமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதே தற்போது சரத்குமாரின் மிகப்பெரிய அதிருப்தியாகும். குறிப்பாக, தன்னுடன் உள்ள முக்கிய ஆதரவாளர்களுக்கு மாவட்டத் தலைவர் பதவிகள் கூட வழங்கப்படவில்லை என்றும், இதனால் அவர் கடும் மனவலியுடன் இருக்கிறார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கிளம்பியுள்ளன.
இந்த சூழ்நிலையில், பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த சரத்குமார், தனக்குச் சமுதாய ரீதியாக ஆதரவளிக்கும் 15 மாவட்டங்களில் தலைவர் பதவிகளை வழங்கக் கோரியதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் தனது சமூக ஆதரவு பலமாக இருப்பதைக் கொண்டு, எதிர்கால சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த கோரிக்கைகளுக்கு மாநில தலைமையிடமிருந்து இன்றுவரை எந்தவிதமான உறுதியான பதிலும் கிடைக்கவில்லையாம். இதனால் மீண்டும் ஒரு முறை தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் எண்ணத்தில் சரத்குமார் இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும், மீண்டும் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தனித்து செயல்படுத்தும் முடிவை எடுத்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வுகள், தமிழக அரசியல் வளைக்குள் ஒரு புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளன. எதிர்காலத்தில் சரத்குமார் எதைத் தேர்வு செய்கிறார் என்பதை எதிர்பார்த்து பார்க்க வேண்டும்.