இந்தியாவின் ஏற்றுமதியில் கடல் உணவு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-2024-ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.60,523 கோடி மதிப்புள்ள 17,81,602 டன் பதப்படுத்தப்பட்ட இறால், மீன், கணவாய், நண்டு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதில், அமெரிக்காவிற்கு மட்டும் ரூ.20,892 கோடி மதிப்புள்ள 3,29,192 டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2023-3024-ம் ஆண்டில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக மட்டும் ரூ.3,214 கோடி மதிப்புள்ள 73,822 டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இறால் அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனா மற்றும் ஜப்பானுக்கான பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்துள்ளது.

இதை ஈடுசெய்யும் வகையில், அமெரிக்காவிற்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா கடல் உணவு ஏற்றுமதிக்கு ஒரு நல்ல சந்தையாக மாறி வருகிறது. தமிழ்நாட்டில் அமெரிக்காவிற்கு கடல் உணவு ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்குகின்றன.
பதப்படுத்தப்பட்ட இறால், கணவாய், மீன் மற்றும் நண்டு உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களின் சுமார் 20 கொள்கலன்கள் தூத்துக்குடியிலிருந்து ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் கடல் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால், ஏற்றுமதி சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடல் உணவுகளை நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.