சென்னை: அமைச்சர் பி.கே. சேகர்பாபு தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் 100 அடி சிலை நிறுவுவது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்தியலிங்கம் பேசுகையில், ”தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு, 1972-ல் சிலை வடிவமைக்கப்பட்டது.

ஆனால், தொல்லியல் துறையின் உத்தரவுப்படி, சிலையை உள்ளே வைக்காமல், வெளியில் வைத்தனர். ராஜராஜ சோழனின் பெருமையை உணர்ந்து இந்திய கடற்படையின் திட்டங்களில் அவருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரத்தில் பெரிய கோவிலை கட்டிய அவருக்கு 100 அடி சிலை நிறுவ வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசுகையில், “மன்னர்களின் பெருமையை போற்றும் வகையில், ஆயிரம் ஆண்டு நூற்றாண்டு விழா, தி.மு.க., ஆட்சியில் நடந்தது. உறுப்பினர் விடுத்துள்ள கோரிக்கையின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, வாய்ப்பு இருந்தால், ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.